சென்னை,
சோபா வந்தவுடன் சில பேர் திமுகவை விட்டுச் சென்று விட்டனர் என சென்னையில் நடந்த திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் திமுக தலைமை நிலையச் செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அவர் பேசியதாவது:-
இந்த திருமண விழாவில் இஸ்லாமிய பெருமக்கள் பெருமளவில் கலந்துகொண்டிருக்கிறீர்கள். இன்று நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்று சிலர் சோபா வந்தவுடன் நம்மை விட்டு சென்றுள்ளனர். ஆனால் நீங்கள் அனைவரும் திமுகவுடன் இருப்போம் என்று உறுதியோடு வந்திருக்கிறீர்கள்.
ஏனென்றால் இஸ்லாமியர்களுக்கும் தி.மு.க.விற்குமான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. யார் என்ன சொன்னாலும், எந்த அவதூறுகளை பரப்பினாலும், சிறுபான்மை மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தி.மு.க. என்றும் காவல் அரணாக இருக்கும்.
தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத அரசாக உள்ளது தவெக அரசு. தற்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருப்பது அரசியல் பேரிடர். இந்த பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை திமுக மீட்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.