திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை உடற்பயிற்சி டம்பள்ஸால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் கல்லாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 50). அவருக்கும், அவரது மகன் வெங்கடேசனுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரிப்பது தொடர்பாக குடும்பத் தகராறு இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கடுமையான மோதலாக மாறியது.
ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கனமான உடற்பயிற்சி டம்பள்ஸை எடுத்து தாய் செல்வியின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக முயன்ற வெங்கடேசனை உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.