மதுரை அருகே அவனியாபுரம் புரசடி 1-வது தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 51). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி ராஜதிலகா. இவர்களுக்கு 2 மகன்கள். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது திடீரென குமரவேல் மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே குமரவேல் இறந்து விட்டதாக கூறினர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. குமரவேலின் தாயார் கோவிந்தம்மாள் (80). மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
சோகம் தாங்காமல் கோவிந்தம்மாள் திடீரென தனது மகனின் உடல் மீது மயங்கி விழுந்து உயிரைவிட்டார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகம் அடைந்து அழுதனர். இதனையடுத்து தாய், மகன் உடல்கள் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. தொடர்ந்து 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.