மதுரை,
மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர், 25 ஆண்டுகளாக காத்திருந்து தந்தையை கொன்றவரை பழி தீர்த்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் சோலைஅழகுபுரம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (வயது 50). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் சிறை சென்றுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை அவர் டீக்கடைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரைத் துரத்தியது. உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து ஓடினார். அவரை விடாமல் துரத்திய கும்பல், ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அவரை கொலை செய்ததாகக் கூறப்படும் 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2001ஆம் ஆண்டு மேலராஜ வீதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சப்பாணி சரவணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக தெரியவந்தது.
புஷ்பராஜின் கொலைக்கு பழிவாங்க காத்திருந்த அவரது மகன் பாலமுருகன், சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பழிக்குப் பழி கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.