தமிழக செய்திகள்

சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

போராடும் ஜனநாயக உரிமையை சிதைக்கும் வகையில் மத்திய உள்துறை செயல்படுகிறது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

சென்னை,

காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

காலவரையற்ற உண்ணாவிரதம்

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஈடுபட்டு வந்தார். அவர் அங்கிருந்து பலவந்தமாக டெல்லி காவல் துறையால் அகற்றப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரப்பான்பூச்சி ஜனதா

தர்மேந்திரப் பிரதான் பதவி விலக்கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அப்போராட்டத்திற்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 21 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.

ஜனநாயக உரிமை

அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் மன உறுதியுடன் போராடி வந்தார். அவருடனும், போராட்டக்களத்தில் உள்ளோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, போராடும் ஜனநாயக உரிமையை சிதைக்கும் வகையில் மத்திய உள்துறை செயல்படுகிறது.

கண்டனம்

தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டெல்லி காவல் துறையை போராடுபவர்களுக்கு எதிராக ஏவிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராடி வருகிறார்கள்.

பதவி நீக்கம் செய்ய வேண்டும்

இந்த போராட்டத்தை மதித்து, தர்மேந்திர பிரதானை உடனடியாக மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.