சென்னை
தென்மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறி உள்ளது இதானால் தமிழகம் முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது
தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது.
திண்டிவனம் மற்றும் வெள்ளிமேடு பேட்டை, பெலகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது
மதுரை மாநகர பகுதிகளான அண்ணா நகர், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், நாமக்கல் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (06-06-2021) தமிழகத்தின் ஒரு சில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (7ம் தேதி) முதல் 9ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை செய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் கேரளா கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.