தமிழக செய்திகள்

சட்டசபையில் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.வேலுமணி

கோவையில் மனித, வனவிலங்கு மோதல்கள் அதிகரித்துள்ளதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் 6 துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு எஸ்.பி.வேலுமணி தனது உரையை தொடங்கினார். மேலும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை குறிப்பிட்டு நன்றி கூறினார். உட்கட்சி பூசலில் இபிஎஸ் மீது எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது இன்றைய பேச்சு பேசுபொருளாகியுள்ளது.

தொடர்ந்து அவர் கூறியதாவது, “அம்மா உணவகம் உட்பட அம்மாவின் திட்டங்களை தொடர் திட்டங்களாக அறிவித்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். திமுக ஆட்சியில் யாரெல்லாம் பவரில் இருந்தார்களோ, அவர்களும் இன்று பவரில் தொடர்கிறார்கள். அவர்கள் நல்ல அதிகாரிகளுக்கு உரிய பணியை வழங்கவில்லை என்றார்.

அப்போது "அவர் எந்த கட்சி சார்பில் பேசியுள்ளார்?" என்று திமுக எம்எல்ஏ ஆஸ்டின் கேள்வி எழுப்ப, "அவர் அதிமுக என்று தான் பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன், வீணான குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்" என சபாநாயகர் பதிலளித்தார். வேலுமணி பதிலளிக்க எழுந்த போது, "வேண்டாம்... நான் கூறிவிட்டேன்" என்று அவரை சபாநாயகர் அமர வைத்தார்.

திமுக ஆட்சியில் நாங்கள் வாய்ப்பு கேட்கும் போது கொடுக்கமாட்டார்கள், நீங்கள் மிகவும் பெருந்தன்மையாக இருக்கிறீர்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச, அதை கேட்டு முதல்-அமைச்சர் விஜய் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

தொடர்ந்து என் வெற்றிக்காக பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்களான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் தம்பி அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அனைத்து முக்கியத் திட்டங்களையும் கொண்டு வந்ததாகவும். மேலும், கோவையில் மனித, வனவிலங்கு மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும், காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதாகவும் கூறினார். ஊருக்குள் வரும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தினார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வரவும், கோவை விமான நிலையத்தை விரிவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.