சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரிமதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயின் ஒரு முக்கிய ஆதாரமாக சொத்துவரி உள்ளது. மேலும், இது சென்னை மாநகரின் பல்வேறு குடிமை சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதியளிப்பில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.
கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சுய-அறிவிப்பு (Self-Declaration) நடவடிக்கையின்போது, சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களின் பயன்பாடு மற்றும் கட்டிடப் பரப்பு குறித்த விவரங்களை வழங்கியதன் அடிப்படையில், சொத்துவரி மதிப்பீட்டில் திருத்தம் செய்யும் பணிகள் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மறுமதிப்பீடு செய்யும் பணிகள் கைவிடப்பட்டது.
சொத்து உரிமையாளர்கள் வழங்கிய விவரங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற மறுஅளவீடு புவிசார் தகவல் அமைப்பு / செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடுகளைத் திருத்தும் பணியை தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் சொத்து வரி மதிப்பீடானது, சொத்தின் சரியான பயன்பாடு மற்றும் கட்டி பரப்பளவை உறுதி செய்வதற்கும், அனைத்து சொத்துக்களிலும் நியாயமான மற்றும் சரியான மதிப்பீட்டை உறுதி செய்வதற்கும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சொத்து உரிமையாளர்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை குறைக்கும் முகமாக, கட்டிடமானது கட்டப்பட்ட காலத்தினை கருத்தில் 'கொள்ளாமல் சொத்துவரி மறுமதிப்பீடு கணக்கீடானது 2025-26 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சொத்து உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீடு தொடர்பாக ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரிமதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் (RDC) தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம்.
அவற்றை பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) பரிசீலினை செய்து, ஆட்சேபனைகள் பெறப்பட்ட தேதியிலிருந்து. ஒருமாத காலத்திற்குள் அவற்றைத் தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சொத்து உரிமையாளர்கள். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, திருத்தப்பட்ட சொத்துவரி மதிப்பீட்டினை சரிபார்த்து, ஏதேனும் நியாயமான ஆட்சேபனைகளாக இருப்பின், அவற்றை உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி தனது சொந்த வருவாய் வலுப்படுத்தி சென்னை மக்களுக்கு திறம்படக் குடிமை சேவைகளை வழங்குவதற்காக, நியாயமான, வெளிப்படையான மற்றும் துல்லியமான சொத்துவரி மதிப்பீட்டை மேற்கொள்வதில் பெருநகர சென்னை மாநகராட்சி உறுதியுடன் உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.