சென்னை,
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11.09.2026 முதல் 12.09.2026 வரை சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் மூலமாக சுமார் 2,31,450 எண்ணிக்கையிலான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தொடர் விடுமுறை முடிந்து 14.09.2026 மற்றும் 15.09.2026 ஆகிய நாட்களில் திருச்சி, மதுரை, திண்டுக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 14.09.2026 அன்று 2,240 சிறப்புப் பேருந்துகள் (திருச்சி- 255, மதுரை&திண்டுக்கல்-300, சேலம்-200, கிருஷ்ணகிரி,ஓசூர்&வேலூர்-195, கோயம்புத்தூர்-50, திருநெல்வேலி-50 ,நாகர்கோவில்-50, தூத்துக்குடி-50, தென்காசி-50, கும்பகோணம்–225, திருவண்ணாமலை-325 விழுப்புரம்-185 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 305) 15.09.2026 அன்று 1,325 சிறப்புப் பேருந்துகள் (திருச்சி-105, மதுரை&திண்டுக்கல்-75, சேலம்-75, கிருஷ்ணகிரி,ஓசூர்&வேலூர்-200, கோயம்புத்தூர்-20, திருநெல்வேலி-10 ,நாகர்கோவில்-10, தூத்துக்குடி-15, தென்காசி-10, கும்பகோணம்–125, திருவண்ணாமலை-175 விழுப்புரம்-85 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 420) என கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மட்டும் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரம் பேருந்து முனையத்திற்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அந்தந்த பேருந்து நிலையங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் பயணிகளின் வருகை மற்றும் தேவையை நேரடியாகக் கண்காணித்து, மேற்கண்ட எண்ணிக்கையையும் தாண்டி தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனுக்குடன் இயக்கவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) ஆகியவற்றின் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பொது மேலாளர் நிலையிலான அதிகாரி பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை), திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றின் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க துணை மேலாளர் / உதவி மேலாளர் நிலையிலான அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பயணிகளின் வருகையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்குவதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்களும் (Nodal Officers) தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை வந்தடையும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக 47 வழித்தடங்களில் 508 பேருந்துகள் மூலம் 2,107 பயண நடைகளும், (Trip) கிளாம்பாக்கம் வழியாக 9 வழித்தடங்களில் 130 பேருந்துகள் மூலம் 1,362 பயண நடைகளும் (Trip) இயக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் கூடுதலாக, 14.09.2026 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும் (Trip), 15.09.2026 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் (Trip) இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், விமான நிலையம், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, பாரிமுனை, பட்டாபிராம், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. ரெயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரெயில் மூலம் சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் இரயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களில், அவர்களின் தேவைக்கேற்ப மாற்று வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்கள், தங்கள் ஊர்களிலிருந்து சென்னை வந்து சேருவது முதல், சென்னையில் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று சேருவது வரை தடையற்ற பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.