தமிழக செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் - ஆசிரியர்களும் பள்ளிக்கு வர உத்தரவு

பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்காக துணை தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் பிரத்தியேகமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதற்கான சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மீண்டும் துணைத் தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்காக அனைத்து பாட ஆசிரியர்களும் கண்டிப்பாக பள்ளிகளுக்கு வர வேண்டும் என்றும் அப்படி பள்ளிகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது ஆசிரியர்களுக்கு விடுமுறை காலம் ஆகும். இருப்பினும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுப்பதற்காக ஆசிரியர்கள் கட்டாயமாக பள்ளிகளுக்கு வர வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.