தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல்-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வே சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, போத்தனூரில் இருந்து நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை), 15 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06028), அதேநாள் மாலை 4.45 மணிக்கு சென்டிரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்டிரலில் இருந்து மேற்கண்ட தேதிகளில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06027), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (புதன்கிழமை), 15,20,22,27,29 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (06023), மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும். மறுமார்க்கமாக, வருகிற 14,16,21,23,28,30 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (06024), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.