சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் லேம்ப் என்ற சிறப்பு சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் வேகமாக குணம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர் வசந்தாமணி கூறியதாவது:-
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகளும் மிக குறைந்த அளவே பதிவாகியுள்ளன. கொரோனா வைரசால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க லேம்ப் எனப்படும் சிறப்பு சிகிச்சை முறை கையாளப்படுகிறது.
இந்த சிகிச்சை முறை மூலம் தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகள் கூட விரைவாக குணமடைகின்றனர். எனாக்ஸ் பெரின், அஸித்ரோமைசின், மீத்தேல் ப்ரட்னிசோலோன் ஆகிய மருந்துகளுடன், நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் சிகிச்சை முறையே லேம்ப் எனப்படும். தற்போது எங்களைப் பின்பற்றி இந்த மருத்துவ முறையை தமிழகத்தின் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.