தமிழக செய்திகள்

ஸ்ரீவைகுண்டம்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது - அண்ணாமலை

மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

தூத்துக்குடி,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த, தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன் மற்றும், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஜெயபால் இருவரும், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

திமுகவின் பாதையில் தவெக பயணம்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய தவெக தலைவர் விஜய் தனது கட்சியினரே குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? மாற்று அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திமுகவின் பாதையிலேயே பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. குற்றவாளிகள் இருவர் மீதும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், இது போல பெண்கள் பாதுகாப்பு கவலைக்குள்ளாகும்படியான சம்பவங்கள் நடைபெறாதவாறு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.