தமிழக செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு: தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்கள், தனித்தேர்வர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இதில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு காலஅவகாசமும் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டு சிறப்பு தட்கல் முறையில் மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்கள் வாயிலாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்

பள்ளிகளில் படித்து தோல்வியடைந்தவர்கள், வருகைபுரியாதவர்கள், தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்களில் விண்ணப்பித்திட மீண்டும் இன்று ஒரு நாள் மட்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.