தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி சாத்தியம் - தங்கர் பச்சான்

எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பது தான் நிபந்தனையற்ற ஆதரவாகும்.

சென்னை,

இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தவெக ஆட்சி அமைக்கவும், திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்கவும் பெரும்பான்மை கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன! இரண்டுமே சாத்தியப்படாத நிலை தான் தற்பொழுது நிலவுகிறது.

ஒருவேளை யார் குறைந்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளியை எப்படியாவது காப்பாற்ற செயற்கை காற்று மூலம் (வென்டிலேட்டர்) காப்பாற்றிக்கொள்ள போராடும் முயற்சி எப்படிப்பட்டதோ அதே நிலைதான் ஏற்படும்

நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் எனக் கூறுகிறார்களே! அதன் பொருள் என்ன தெரியுமா? எந்த நொடி வேண்டுமானாலும் செயற்கை மூச்சு தருவதை பிடுங்கி கொள்வோம் என்பதுதான்! மறு தேர்தலை சந்திப்பதன் மூலம் மட்டுமே நிலையான ஆட்சி தமிழ்நாட்டில் சாத்தியம்.

மேற்சொன்ன நிலைக்குச் சென்று அவசர சிகிச்சை நோயாளியாக இருந்து கொண்டு தான் விஜய் ஆட்சி அமைக்க விரும்புகிறாரா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.