கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத முதல்வராக ஆட்சி நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின் - அண்ணாமலை

துருப்பிடித்த கரங்களை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத முதல்வராக ஆட்சி நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த முறை தமிழகத்தில் நடைபெற இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சட்டமன்ற தேர்தலில் தீயசக்தி திமுகவை விரட்டியடித்து மக்களுக்கான நல்லாட்சி வழங்கிட வேண்டும் என்ற உறுதியோடு களத்தில் பயணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அஇஅதிமுக சார்பில் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

வருகின்ற மே 4-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது திமுகவிற்கு படுதோல்வி உறுதியாகியிருக்கிறது. காரணம், தமிழக மக்கள் கடந்த 5 ஆண்டுகால திமுகவின் காட்டாட்சியை பார்த்து சலிப்படைந்து விட்டனர். திமுகவை தூக்கியெறிய முடிவெடுத்துவிட்டனர். கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் 39,999 போக்சோ வழக்குகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்திருக்கும் கொடுமை நடக்கிறது, கையாலாகாத துருப்பிடித்த கரங்களை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத முதல்வராக ஆட்சி நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின்.

பிரதமருக்கு கடைசி எச்சரிக்கை விடுவதாக முதல்வர் ஸ்டாலின் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அவருக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். உங்களின் சகோதரி கனிமொழி, ஆ.ராசா, செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் உங்கள் மீதும் கூட வழக்குகள் நிலுவையில் உள்ளன. எந்த வழக்கில் இருந்தும் நீங்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை. ஜாமினில் தான் வெளியே இருக்கிறீர்கள். எனவே, உங்கள் எச்சரிக்கை எல்லாம் கோபாலபுரத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள் என எச்சரிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். முதல்வர் அதிகாரத்தை மக்கள் நலனிற்காகவும், தமிழக வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த முடியாத உங்களுக்கு தமிழக மக்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள்.

அதற்கு, உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அஇஅதிமுக சார்பில் களம் காணும் நமது வெற்றி வேட்பாளர் ராதாகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்வார்கள் என்பது உறுதி. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! தமிழகம் நலம் பெறட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.