தமிழக செய்திகள்

விவசாயிகளின் விரோதி ஸ்டாலின் - நாகையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு

நம்முடைய கட்சி பிஜேபிக்கு அடிமையாம். திரு.ஸ்டாலின் அவர்களே எங்கள் கட்சி தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாகை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாகை அவுரித்திடலில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து என்னை பற்றி விமர்சனம் செய்து வருகிறார் ஸ்டாலின். சாதனைகளை பற்றி பேசாமல், சாக்கடைக்கு சமமாக பேசுவதாக விமர்சிக்கிறார். வின்னர் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் கட்டதுறை, கட்டத்துறை திருந்துவது போல் இல்லை.

சாக்கடையில் இருப்பவர்களே அவர்கள் தான். தீய சக்தி திமுகவை ஒழிக்க தொடங்கிய கட்சி அதிமுக. பாஜகவுக்கு அதிமுக அடிமை என பேசி வருகிறார். எங்கள் கட்சி தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை. தன் குடும்பத்தில் யாருக்கு பதவி கொடுப்பது, அதிகாரம் கொடுப்பது என நினைத்தவர் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என கருணாநிதி எதிர்பார்த்தார். எத்தனை வழக்குகள் போட்டார்கள், அத்தனையும் மக்கள் துணையோடி வென்று வலிமையாக மாறினோம். நாம் அடி வாங்க, வாங்க கட்சி வலுவானது. ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் தவறால் அதிமுக பலம் பெற்றது. எங்கள் இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். தெய்வ சக்தி உள்ள கட்சி அதிமுக.

தன்னலமின்றி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு தந்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா.எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மக்களுக்காக உழைத்தவர்கள், அவர்களுக்கு நாம் தான், மக்கள் தான் வாரிசு.

அதிமுக ஆட்சியில் காவிரி படுகை பகுதிகளை பாதுகாப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். மேகதாதுவில் அணை கட்டுவோம் என சொன்ன கர்நாடகா மந்திரியுடன் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் நாகை, காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். நானும் டெல்டாகாரன் என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் விவசாயிகளுக்கு நன்மை செய்யக்கூடியவரா? விவசாயிகளின் விரோதி ஸ்டாலின்.

இவ்வாறு அவர் கூறினார்.