கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் - நயினார் நாகேந்திரன்

அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் மிக முக்கியமான அரசு மருத்துவமனையான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், இடநெருக்கடியின் காரணமாக ஒரே படுக்கையில் கிட்டத்தட்ட 3 நோயாளிகள் வரை அனுமதிக்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி கடும் கண்டனத்திற்குரியது.

மருத்துவமனையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, நோயாளிகள் அனைவரையும் ஒரே பிளாக்கில் இடம் மாற்றியதன் விளைவு தான், இந்த இட நெருக்கடிக்கு காரணம் என்று சொல்லப்படுவது , தமிழக சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் குளறுபடிக்கான சான்று. தலைமைச் செயலகத்தில் ஏதாவது புனரமைப்பு பணிகள் நடந்தால், அரசு அமைச்சர்களை எல்லாம் இப்படித்தான் ஒரே அறையில் அடைத்து, ஒரே சீட்டில் இடித்துக் கொண்டு அமர வைப்பார்களா?

உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களுக்கு நல்ல காற்றோட்டமான, வசதியான படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற அடிப்படை கூட ஜோசப் விஜய் அரசுக்கு தெரியவில்லையா? அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் எல்லாம் விளிம்புநிலை மக்கள் தானே என்ற இளக்காரமா? முந்தைய திமுக அரசைப் போலவே, தற்போதைய தவெக அரசும், அரசு மருத்துவமனைகளையும், அதை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் அலட்சியப்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

எனவே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தரமான படுக்கைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போதிய அளவில் ஏற்பாடு செய்து தர வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜையும், முதல்வர் விஜய்யையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.