தமிழக செய்திகள்

தமிழகத்தில் கிராம்பு உற்பத்தி கடும் சரிவு: ஒரு கிலோ ரூ.1,000 ஆக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 750 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்படுகிறது.

கன்னியாகுமரி,

சமையலில் நறுமணத்திற்கு பயன்படுவது மட்டுமின்றி, நாட்டு மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிப்பது கிராம்பு. தமிழ்நாட்டில் கிராம்பு சாகுபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதியான மாறாமலை, கரும்பாறை, மகேந்திரகிரி, வேளிமலை ஆகிய இடங்களில் 750 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

நாட்டில் ஆண்டுக்கு 1,200 டன் (ஒரு டன் ஆயிரம் கிலோ) கிராம்பு உற்பத்தி செய்யப்பட்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு 1,000 டன் ஆகும். அதுவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 800 டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற கிராம்பு சாகுபடியின் அறுவடை திருப்திகரமாக இல்லை. விவசாயிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் 90 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. உற்பத்தி என்பது 10 சதவீதம் அளவுக்குத்தான் கிடைத்தது. அதனால், கிராம்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிராம்புக்கு உள்நாட்டிலேயே தேவை அதிகம் என்பதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.

தற்போது, உற்பத்தி குறைந்துள்ளதால், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் கிராம்பு அறுவடை தொடங்கியபோது, ரூ.900-க்கு விற்பனையான ஒரு கிலோ தற்போது ரூ.1,000 ஆக விலை உயர்ந்துள்ளது. 2-வது ரக கிராம்பு ரூ.950-க்கும், இறக்குமதி கிராம்பு ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.