தமிழக செய்திகள்

தென்மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் தங்கம் தென்னரசு

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனை ரூ.8 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று தமிழக அரசின் தொழில் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

மதுரை

தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் திருமலை நாயக்கர் மகாலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்தமிழகத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னமாகவும் மதுரை நகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும் திருமலை நாயக்கர் அரண்மனை திகழ்ந்து வருகிறது. இந்த அரண்மனை வளாகத்தை தமிழக அரசு புதுப்பித்து பொலிவு பெறச் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள இத்தகைய மரபு, பண்பாட்டுச் சின்னங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து தமிழர் நாகரிகம், பண்பாட்டை உலகறியச் செய்யவும் வகையில் சரியான முறையில் பராமரிக்குமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, தமிழக அரசின் தொல்லியல் துறையால் இந்த அரண்மனை வளாகம் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது ரூ. 11 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.

தற்போது அரண்மையில் உள்ள நாடக சாலை, பள்ளியறை போன்ற பகுதிகள் புதுப்பிக்கப்படவுள்ளன. இந்த அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு கால கல்வெட்டுகள் பராமரிக்கப்படுகின்றன. தொன்மையான வட்டெழுத்து கல்வெட்டுகள் சோழர், பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்தி அவற்றின் சிறப்புகளை எளிதில் உணரும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் 3 கட்டங்களாக நடைபெறும்.

இதில், முதல்கட்டப் பணிகள் விரைவில் தெடங்கப்படும். மேலும் அரண்மனைக்கு வெளியே கற்சிற்பங்களுடன் கூடிய பூங்கா, பழமையை வெளிப்படுத்தும் நூலகம் ஆகியனவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

தொன்மையான நகரின் வரலாற்றுச் சுவடாக இருக்கக் கூடிய திருமலை நாயக்கர் அரண்மனையானது புதுப்பிக்கும் பணிகளின் வாயிலாக மேலும் பொலிவுபெறும்.

தமிழை எந்த காலத்திலும் யாராலும் புறக்கணிக்க முடியாது. தமிழின் தொன்மை எழுத்து வடிவிலேயே 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கீழடி ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இத்தகைய பெருமைகளின் காரணமாகவே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமிழைப் புறக்கணிக்கும் முயற்சிகளில் யாரேனும் ஈடுபட்டால் நமது மொழிக்கான முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்து வழிமுறைகளும் தமிழக அரசு மேற்கொள்ளும்.

தொழில் வளர்ச்சியில் தென்மாவட்டங்கள் பின்தங்கியிருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு முந்தைய தி.மு.க. ஆட்சியில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்ட போது தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மதுரை -தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்டத்துக்கு வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் செயலாக்கத்துக்கான ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டாலும் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவிதமான செயல்வடிவமும் பெறாமல் இருக்கிறது.

ஆகவே மதுரை தூத்துக்குடி தொழில்வழிச் சாலைத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தவும் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், சு.வெங்கடேசன் எம்.பி,எம்.எல்.ஏக்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன்,முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை