தமிழக செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை மூலப்பொருட்கள், கழிவுகளை வெளியேற்ற அனுமதிக்க முடியாது: தூத்துக்குடி கலெக்டர்

பிரதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள், மூலப்பொருட்களை வெளியேற்ற அனுமதி வழங்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டில் தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மேலாளர் சுமதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூடப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக அவசரகால நிலையை கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப்பொருட்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக்கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தின் உள்ளே உள்ள ஆபத்தான மூலப்பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் கொரோனா 2-ம் அலையின் போது 2,132.64 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன் மற்றும் 7,833 மெட்ரிக் கியூப் மருத்துவ ஆக்சிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை செய்தனர்.

வெளியேற்ற அனுமதிக்க வேண்டும்

தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்திய எண்ணெயை வெளியேற்றவும் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்த எந்திரங்களை சரி செய்யவும் உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே ஆக்சிஜன் தயாரிக்க உபயோகப்படுத்திய எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகளை வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே இங்கு வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றவும் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அனுமதிக்க முடியாது

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி துரைசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் தரப்பில் பதில் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், மருத்துவ அவசர நிலை கருதியே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. மூலப்பொருட்களை அகற்ற ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் அனுமதி கோரியபின், அமைக்கப்பட்ட சிறப்புக்குழு, அனுமதி வழங்க பரிந்துரைக்கவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பரிந்துரைக்கவில்லை. இந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட பிரதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், அந்த நிறுவனத்தில் உள்ள கழிவுகள் மற்றும் மூலப்பொருட்களை வெளியேற்ற அனுமதி அளிக்க இயலாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே அடுத்தகட்ட நிலை குறித்து தெரிவிக்க ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்