வெறிபிடித்த நாய் 
தமிழக செய்திகள்

கடலூர் அருகே ஒரேநாளில் 25 பேரை கடித்த தெரு நாய்!

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 25 பேர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே ஒரு தெருநாய், ஒரே நாளில் 25 பேரைக் கடித்துக் குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாயின் அடுத்தடுத்த தாக்குதல்

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெரு நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது திடீரென வெறிபிடித்த அந்த நாய் சாலையில் சென்றவர்களைத் தாக்கத் தொடங்கியது.

மேலும், கண்ணில் பட்டவர்களையெல்லாம் துரத்தித் துரத்திக் கடித்தது. அந்த வெறிநாயிடமிருந்து தப்பிக்க பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 25 பேர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர்.

தீவிர சிகிச்சை

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு புவனகிரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து, ரேபிஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி வருகின்றனர்.

மக்கள் கோரிக்கை

ஒரே நாளில் இத்தனை பேரை நாய் கடித்த சம்பவம் புவனகிரி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி முடங்கியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த வெறிநாயைப் பிடிக்க வேண்டும் என்றும், நகரில் உள்ள மற்ற தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.