தமிழக செய்திகள்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சென்னை,

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் வெளியிடுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வததாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, கூடுதல் விலைவைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடைப்பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் நேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும், மாவட்ட மேலாளர்களும், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து மண்டலத்திலுள்ள (Flying Squad Deputy Collectors) பறக்கும் படை துணை ஆட்சியர்கள் தத்தம் மண்டலத்தில் தெரிய வரும் புகார்கள் குறித்தான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை ஆய்வு செய்து, தவறு செய்யும் கடைப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.