தமிழக செய்திகள்

சென்னையில் தண்டவாளங்கள் அருகே பட்டம் விட்டால் கடும் நடவடிக்கை - ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

மின்சார பாதைக்கு அருகில் பட்டம் விடுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் ரெயில் தண்டவாளங்கள் மற்றும் மின் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ரெயில் நிலையங்கள், தண்டவாளங்கள், உயர் அழுத்த மின் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார பாதைக்கு அருகில் பட்டம் விடுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் எனவும், ரெயில்வே எல்லைக்குள் பட்டம் விடுவது ரெயில்வே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. சட்டத்தை மீறும் நபர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.