திருச்செந்தூர் ,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் நாளை (ஜூலை 1) முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்த தடை அமலில் இருந்து வருகிறது. தற்போது அந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி, அனைத்து தரிசன வரிசைகளிலும் உள்ள நுழைவு வாயில்களில் பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சோதனையின்போது பக்தர்களிடம் செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால், பாதுகாப்பு நடைமுறைகளின்படி அவை பறிமுதல் செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ வைத்துவிட்டு கோவிலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கைபேசி பாதுகாப்பு வைப்பகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேவையெனில், பக்தர்கள் தங்களது செல்போன்களை அங்கு ஒப்படைத்து பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.