தமிழக செய்திகள்

அரசு பள்ளிகளில் 2026-27-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை: நாளை முதல் தொடங்க திட்டம்

பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து இருக்கிறது.

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். தற்போது மாணவர்கள் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, திறன்மிகு வகுப்பறைகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருக் கும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேற் கொண்டு வருகிறது. இதனை முன்னிலைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாண வர் சேர்க்கையை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி, கடந்த 2024-ம் ஆண்டு முதல் கல்வியாண்டு முடிவதற்கு முன்னதாகவே, அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதற்கு பெற்றோரிடம் நல்ல வரவேற்பு இருந்து வரும் சூழலில், 2026-27-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் அந்தந்த பள்ளிகளில் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக அரசு பள்ளிகளில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்ட அந்தந்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை கணிசமான அளவில் உயர்த்த வேண்டும். மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல்களையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.