பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் காதல் மலர்ந்துள்ளது. தனது காதலன் பைக் கேட்டு அடம் பிடித்ததால், எப்படியாவது பைக் வாங்கி கொடுக்க மாணவி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, அடிக்கடி தான் சென்று வரும் தனது நெருங்கிய தோழியின் வீட்டையே குறி வைத்துள்ளார். தோழியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திய அந்த மாணவி, அங்கிருந்த 9 பவுன் தங்க நகைகளை நைசாக திருடி சென்றுள்ளார்.
திருடிய 9 பவுன் நகைகளையும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு அடகு கடையில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்றுள்ளார். அந்த பணத்தை அப்படியே கொண்டு போய், தனது காதலன் ஆசைப்பட்ட புத்தம் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழியின் பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கல்லூரி மாணவி மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரித்த போது, தோழி வீட்டில் நகையை திருடி காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்ததை அழுதுகொண்டே ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மாணவியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை பெண்கள் சிறையில் அடைத்தனர்.
ஆசை காதலனுக்கு பைக் வாங்கி தந்த மாணவி, தற்போது சிறைச்சாலைக்கு சென்ற சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.