கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை - போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

நாகை மாவட்டம் தேத்தாக்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் நிஷா (18 வயது). இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி வேளாண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று முன்தினம் இரவு விடுதியில் உள்ள ஒரு அறையில் நிஷா மட்டும் படித்துக்கொண்டிருந்தார்.

நேற்று காலை வெகுநேரமாகியும் அந்த அறை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள், அந்த அறை கதவை திறக்க முயன்றனர். ஆனால் அது உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊழியர்கள் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு நிஷா மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நிஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.