குழித்துறை,
பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை பற்றி, பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி அம்பலப்படுத்தினார். இதனை தொடர்ந்து போலீசாரால் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஒரு மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தாய் இறந்து விட்டார். தந்தையும் மாணவியை கவனிக்கவில்லை.
இதனை தொடர்ந்து பாட்டியின் பராமரிப்பில் மாணவி இருந்தார். அப்போது பாட்டியின் வீட்டுக்கு மர வேலை பார்க்கும் தொழிலாளியான படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 50) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இந்தநிலையில் மாணவி படிக்கும் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் அந்த மாணவியும் பங்கேற்றார். அப்போது அங்கு பேசிய அதிகாரிகளின் நம்பிக்கையான பேச்சைக் கேட்டு அந்த மாணவி தனக்கு நடந்த அவலத்தை துணிச்சலாக எடுத்துக் கூறி இருக்கிறார். தொழிலாளி கொடுத்த தொல்லையால் மனஉளைச்சலில் இருப்பதாக கூறி அழுதுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நிகழ்ச்சியை நடத்திய 'சைல்டு லைன்' அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். தொழிலாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி அம்பலப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.