கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த ராயக்கோட்டை சாலை பகுதியில் உள்ள வாடகை வீட்டில் 14 வயது சிறுவன் பெற்றோருடன் தங்கி, அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 6 மாதமாக பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இவருடன் 9ம் வகுப்பு படித்த சக மாணவி ஒருவர், இவரது வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
பள்ளியில் இடை நின்ற பள்ளி மாணவனின் சக பள்ளி நண்பர்கள் 2 பேர், அவ்வப்போது இடைநின்ற பள்ளி மாணவனின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர்.அப்போது சக மாணவி, மேல் வீட்டில் வசிப்பதையும் அவர்கள் கவனித்துள்ளனர். சிறிது நாட்கள் அவர்கள் வந்து சென்ற நிலையில், அந்த மாணவி குறித்து இடைநின்ற பள்ளி மாணவனிடம் விசாரித்துள்ளனர். இடைநின்ற பள்ளி மாணவனோ, அந்த மாணவியின் இன்ஸ்டா ஐடி, பேஸ்புக் ஐடி, மொபைல் நம்பர் என அனைத்தும் தனக்கு தெரியும் எனவும், என்ன செய்ய வண்டும் சொல்லுங்கள் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் அவரது புகைப்படங்களை பதிவிறக்கம் செய்தனர். மேலும் 3 பேரும் சேர்ந்து போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை உருவாக்கி அதன் மூலம் மாணவிக்கு நண்பர்களுக்கான அழைப்பு 'ரிக்வேஸ்ட்' கொடுத்தனர். அந்த அழைப்பை மாணவி ஏற்றுக்கொண்ட உடனே மெசேஜ் மூலமாக மாணவியை அவர்கள் மிரட்டினார்கள். மேலும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக 'மார்பிங்' செய்து அவருக்கு அனுப்பினார்கள்.
இந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க அவரை ஆடையின்றி வீடியோ, போட்டோ எடுத்து அனுப்ப சொன்னார்கள். மாணவியும் பயந்து அவ்வாறு எடுத்து அந்த போலி ஐ.டி.க்கு அனுப்பினார். அதை பதிவிறக்கம் செய்த மாணவர்கள் மாணவியின் தந்தையின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை தேடினார்கள். அவருக்கு அக்கவுண்ட் இல்லாததால் அவரது செல்போன் எண்ணின் வாட்ஸ்-அப்புக்கு மாணவியின் ஆடையில்லாத வீடியோ, படங்களை அனுப்பி அதை சமூக வலைதளங்களில் பரப்பாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினார்கள்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை அந்த எண் யாருடையது என்று பார்த்தார். அப்போது அது பக்கத்து வீட்டை சேர்ந்த மாணவரின் செல்போன் என தெரிய வந்தது. அவரிடம் கேட்ட போது தனது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து இவ்வாறு செய்ததாக கூறினார். இது குறித்து மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பள்ளி மாணவர்கள் 3 பேரையும் கைது செய்து சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைத்தனர்.