ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டி கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தேனி, ஆண்டிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை வேளையில் 2 அரசு பஸ்கள் தேனியில் இருந்து இயக்கப்பட்டது. இந்த நிலையில் மாலை வேளையில் இயக்கப்பட்ட 2 பஸ்களில், தற்போது ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
அந்த பஸ்சும் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது. இதனால் ஒரே பஸ்சில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் முன், தேக்கம்பட்டிக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆண்டிப்பட்டியில் இருந்தும் அரசு பஸ் இயக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.