தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கழிவறையைப் பயன்படுத்தச் சென்ற 9 மாணவர்கள் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில், பணியாளர்கள் தங்குவதற்காக தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்த பின்னரும் அந்த தற்காலிக மின் வயர் அகற்றப்படாமல் அலட்சியமாக விடப்பட்டது.
மேலும் பலத்த காற்றின் காரணமாக அந்த மின் வயர் சேதமடைந்து, கழிவறையின் இரும்பு மின் கதவில் உரசியபடி இருந்துள்ளது. இதனால் கதவு முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், கழிவறையைப் பயன்படுத்த வந்த 9 மாணவர்கள் கதவைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர்.
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள், அவர்களை மீட்டு உடனடியாக தொப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் ஆபத்தான மின் இணைப்பை அகற்றாமல் இருந்ததே விபத்துக்குக் காரணம் என ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், இந்த விபத்தை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைக்க தலைமையாசிரியர் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் நேரடியாக பள்ளிக்குச் சென்று தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையின் அடிப்படையில், கடும் அலட்சியத்துடன் செயல்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் செந்தாமரையை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள மற்ற 3 ஆசிரியர்களிடமும் விளக்கக் கடிதம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.