தமிழக செய்திகள்

வாகன சோதனையின்போது லாரி டிரைவரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது லாரி டிரைவர் மீது தாக்குதல் நடத்திய போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி மாவட்டம் சமயபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வராஜ்.

இவர் சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகில் சக போலீசாருடன் வாகன சோதனையில் நேற்று காலை ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருவெறும்பூர் பெல் நிறுவனத்திற்கு இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை டிரைவர் ஆயரசன் என்பவர் ஓட்டி வந்தார்.

லாரி டிரைவர் மீது தாக்குதல்

இந்த நிலையில் அந்த லாரியை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். டிரைவர் ஆயரசனிடம் பெர்மிட், இரும்பு பாரம் கொண்டு செல்வதற்கான ஆவணங்களை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், லாரி டிரைவர் ஆயரசனை தரக்குறைவாக பேசியதோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் காயம் அடைந்த லாரி டிரைவர், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை குறுக்கே நிறுத்தியதுடன், அவ்வழியாக வந்த இதர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார். மேலும் இதர லாரி டிரைவர்களும், ஆயரசனுக்கு ஆதரவாக லாரிகளை சாலையில் நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக பணியிடை நீக்கம்

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் சில கிலோமீட்டர் தூரம் ஸ்தம்பித்து நின்றன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உயரதிகாரிகள் டிரைவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் என்ன நடந்தது எனவும் அவரிடம் கேட்டறிந்தனர். விசாரணையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், சமயபுரம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்