தமிழக செய்திகள்

மத்திய அரசின் தலையீட்டால் தமிழக டிஜிபி திடீர் மாற்றம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டினார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தமிழக டிஜிபி வெங்கட்ராமன், தாம்பரம் மற்றும் மதுரை காவல் துறை ஆணையர்கள் மற்றும் இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் மத்திய அரசின் அழுத்தத்தால் தேர்தல் ஆணையத்தால் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல உயர் அதிகாரிகளை இடமாறுதல் செய்திட, தேர்தல் ஆணையம் முயல்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலால் இது போன்று இடமாறுதல்கள் செய்வதை கைவிட வேண்டும். தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய அரசியல் சட்டப்படி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜக விற்கு ஆதரவாக செயல்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும், நேர்மையாக, நடுநிலையாக தேர்தலை நடத்துவதற்கும் எதிரானதாகும். இத்தகைய பாரபட்சப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.