தூத்துக்குடி மாநகரின் மிக முக்கியப் பகுதியான 1-வது ரெயில்வே கேட் நேற்று எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ரெயில்வே கேட்டில் உள்ள தானியங்கி கதவு திடீரென இயங்காமல் போனதே இந்த பாதிப்பிற்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, கதவுகளைத் திறக்கவோ மூடவோ முடியாத நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த ரெயில்வே தொழில்நுட்பப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பழுதான தானியங்கி கதவைச் சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். முக்கிய சாலை என்பதால், கேட் மூடப்பட்டதைத் தொடர்ந்து சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
மாற்றுப் பாதை குறித்த தெளிவான அறிவிப்பு இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள், அவசர சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தப் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தைச் சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.