ஈரோடு,
ஒரு மாதமாக அதிகரித்து வந்த மஞ்சள் விலை திடீரென சரிவை சந்தித்துள்ளது.
ஈரோட்டில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகள் விளைவித்து கொண்டுவரும் பொருட்கள் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், மஞ்சள், கொப்பரை, நெல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையாகின்றன.
கடந்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி விரலி மஞ்சள் குவிண்டால் (100 கிலோ), தரத்திற்கு ஏற்ப ரூ.11,206 முதல் ரூ.14,269 வரையும், கிழங்கு ரூ.10,429 முதல் ரூ.13,140 வரையும் விற்பனையானது.
கடந்த 20-ந் தேதி அதிகபட்சமாக, விரலி மஞ்சள் ரூ.12,967 முதல் ரூ.19,779 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்படி, ஒரே மாதத்தில் ரூ.4,500 வரை விலை உயர்ந்த மஞ்சள் விலை, தற்போது ரூ.2 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது.
தாவது, நேற்று விரலி மஞ்சள் ரூ.11,329 முதல் ரூ.18,311 வரையும், கிழங்கு ரூ.10,869 முதல் ரூ.16,616 வரையும் விற்பனை ஆனது.
மஞ்சள் விலை திடீர் சரிவு குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த மாதம் மஞ்சள் தேவை அதிகரித்து, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. இதனால், இருப்பு வைத்திருந்த மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். இந்த நிலையில், தேசிய அளவில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை கூடுதலாக கிடைக்காமல் சரியத் தொடங்கியுள்ளது" என்றனர்.