பீகார் மாநிலம், ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரவ் குமார் (24). இவர் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி அடையார், இந்திரா நகர், 1-வது அவென்யூவில் கடந்த 26-ம் தேதி வீசப்பட்டார். இது தொடர்பாக அடையாறு போலீஸார் வழக்குப் பதிந்து அதே மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி சிக்கந்தர் என்ற சத்யேந்தர் (30), கூட்டாளிகளான அதே மாநிலத்தைச் சேர்ந்த லலித் யாதவ் (40), விகாஷ் குமார் (24) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கவுரவ் குமார் மட்டும் அல்லாமல் அவரது மனைவி முனிதா குமாரி (22), மகன் பிர்மானி குமார் (2) ஆகியோரையும் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரிந்தது. குறிப்பாக மகன் மத்திய கைலாஷ் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய், மனைவி பெருங்குடி குப்பைக் கிடங்கில் வீசப்பட்டனர். பிஹார் இளைஞர், அவரது மகன் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்ட நிலையில், மனைவி உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் பெருங்குடி குப்பைக் கிடங்கில் போலீஸார் தொடர்ந்து தேடினர். நேற்று 3-வது நாளாக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை கிளறி தேடினர். இதையடுத்து மதியம் 12 மணியளவில் முனிதா குமாரி உடல் மீட்கப்பட்டது.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும் முனிதா குமாரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், ஒத்துழைக்காத அவரையும், தடுக்க முயன்ற அவரது கணவரையும், அழுது கொண்டிருந்த மகனையும் அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையில் மாறுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டறியப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முனிதா குமாரி என்பவரின் பிரேதமானது ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் 31.01.2026 முற்பகல், உதவிப் பேராசிரியர்கள் மருத்துவர். சிவக்குமார் மற்றும் ரகுராம் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவினரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மேற்படி பெண் கற்பழிக்கப்பட்டதற்கான மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதற்கான தடயங்கள் எதுவுமில்லை என்றும், தலையில் இரும்பு கம்பியினால் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே இறப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.