தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்வு

கடந்த மாதம் சர்க்கரை விலை கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை,

தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்து கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பண்டிகை காலம்

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு சர்க்கரை விலை உயர்ந்து வருகிறது. அதாவது கடந்த மாதம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த 20-ந்தேதி ஒரு கிலோ சர்க்கரை ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி. ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளதால் சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளது.

இ-20 பெட்ரோல்

இது ஒரு புறம் இருக்க, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக நமது நாட்டில் இ-20 வகை பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இந்த இ-20 பெட்ரோல் தயாரிப்பதற்கு கரும்பை மூலப்பொருளாகக் கொண்ட எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. எனவே அதற்கு கரும்பு தேவை அதிகமாக இருப்பதால் சர்க்கரை விலை கூடுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு இ-20 பெட்ரோல் விற்பனைக்கும், சர்க்கரை விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.

கிலோ ரூ.72-க்கு விற்பனை

எது எப்படியாக இருந்தாலும் சர்க்கரைத் தேவை அதிகரிப்பு காரணமாக விலை உயர்ந்து வருவதால் மராட்டிய மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சர்க்கரைப் பதுக்கலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று தமிழ்நாட்டில் சர்க்கரை ஒரு கிலோ ரூ.72 விற்பனை ஆனது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.