தமிழக செய்திகள்

கோடை விடுமுறை: கொடைக்கானலில் 10 கிலோமீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் அதிகாலை முதலே கார், வேன், பஸ் உள் ளிட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர்.

இதனால் நகரின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி, உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலை என முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கொடைக்கானல் நகர்ப்பகுதி ஸ்தம்பித்தது. குறிப்பாக பெருமாள்மலை முதல் வெள்ளி நீர்வீழ்ச்சி, ஏரிச்சாலை வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று நண்பகலில் மிதமான வெப்பம் நிலவிய நிலையில், அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கி இதமான சூழல் நிலவியது. அத்துடன் மதியத்துக்கு பிறகு பல்வேறு இடங்களில் மழை பெய்து குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது.