தமிழக செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை ஒடுக்குவதா..? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய மோசடி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி, லத்தியால் தாக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தெருக்குரல் அறிவு

இந்த சூழலில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் தலைமைச் செயலகம் முன்பு ராப் பாடகர் தெருக்குரல் அறிவு நீட் தேர்வுக்கு எதிராக முதல்-அமைச்சர் குரல் கொடுக்க வலியுறுத்தி கோஷமிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற நிலையில் மீண்டும் தலைமை செயலகத்துக்கு அழைத்து வந்தனர். இந்தசூழலில் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து தெருக்குரல் அறிவு பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நீட் (NEET) தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் எனது அன்புச் சகோதரருமான 'தெருக்கூரல் அறிவு' (Therukkural Arivu) அவர்களை கைது செய்துள்ள, விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அவரது குரல் தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.

தவெக அரசு

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான பேரணிகளும் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் வேளையில், அறிவு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை தவெக (TVK) அரசு மேற்கொண்டுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகத் தாங்களும் களமிறங்கத் திட்டமிட்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு, இது ஒரு கவலையளிக்கும் செய்தியை அளிக்கிறது.

மோசடி

நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறியுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர ஒடுக்கப்படக் கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.