தமிழக செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: மூத்த வக்கீல்களை வைத்து வாதாடவேண்டும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசு மூத்த வக்கீல்களை வைத்து வாதாடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 6-1-2020 கடைசி தேதி என்ற நிலையில், வெறும் 2 நாள் இடைவெளியில், நீட் தேர்வு கட்டாயம் என்று மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, நீட் தேர்வை ரத்து செய்ய நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று, காட்டிக் கொண்டு, தமிழக மக்களை ஏமாற்ற 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ஒரு நடுப்பகல் நாடகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாணமின்றி அரங்கேற்றி இருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

கடந்த 4 வருடங்களாக நீட் தேர்வு உண்டா, இல்லையா என்று கடைசி வரை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது அ.தி.மு.க. அரசு. இந்தச் சூழலில்தான், என்ன இது புதுக் குழப்பம் என வரும் சினிமா வசன பாணியில், இப்போது புதிய வழக்குப் போட்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்பதை 3 வருடம் கழித்து சிறிதும் கூச்சமில்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு.

தமிழ்நாடு சட்டமன்ற மசோதாக்களுக்கு ஒப்புதல்பெற முடியாத படுதோல்வியைத் திசை திருப்பவும் மாணவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட மாபெரும் மோசடியை மூடி மறைக்கவும் திட்டமிட்டு அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. மசோதாவிற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசை எதிர்த்து வழக்குப் போட்டால், தனது முதல்-அமைச்சர் பதவிக்கே ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தட்டியுள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள காரணங்கள் எதுவும் புதிதல்ல. நீட் தேர்வை ரத்து செய்தபோது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த மறைந்த அல்டாமஸ் கபீர் சுட்டிக்காட்டிய காரணங்கள் தான். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மாணவ - மாணவியர் நலனில் அக்கறையுள்ள கல்வியாளர்களும் எழுப்பிய காரணங்கள்தான். ஏன் நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டே எழுப்பிய கேள்விகள்தான் இவை. ஆனால் அ.தி.மு.க. அரசுக்கு இவையெல்லாம் 4 வருடங்களுக்குப் பிறகுதான் நினைவுக்கு வந்திருக்கிறது என்பது இந்த அரசின் நிர்வாக அவலட்சணம் மட்டுமல்ல தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க. அரசு மாணவர்களின் நலனைக் காவு கொடுத்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. எதை எதையோ நினைவில் வைத்து நாள்தோறும் பேசும் அ.தி.மு.க. அரசுக்கு, இந்த ஒன்றில் மட்டும் நினைவு தவறியது எப்படி?.

எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு காலம் கடந்து நினைவு பிறந்திருந்தாலும், இந்த வழக்கிலாவது முறைப்படி மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் சமூக நீதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மருத்துவ கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வு இந்த கல்வியாண்டே ரத்தானால் தான், மிகவும் தாமதமான நடவடிக்கை இது யாருக்கும் பயனளிக்காது என்ற பழியில் இருந்து, இந்த ஒரு பிரச்சினையில் இருந்தாவது, அ.தி.மு.க. அரசினர் தம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.