தமிழக செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

வெறுப்பு பேச்சுகளை தடுக்க போதுமான சட்டங்கள் இருப்பதால் மேலும் சில உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை தடுக்க கோரியும், சனாதனத்தை கொசு ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி, ஆ.ராசா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பேசியதாகவும், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத் - சந்திப் மேத்தா அமர்வு முன் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

அதில், குற்றங்களை வரையறுப்பது சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டது. சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றங்களிலும் இயற்றப்படும் சட்டங்களுக்கு உரிய விளக்கத்தை நீதிமன்றங்கள் வழங்கலாம். ஆனால் சட்டத்தை இயற்ற வற்புறுத்த முடியாது. சமூக மாற்றத்திற்கு ஏற்றபடி வெறுப்புப் பேச்சுகளை தடுக்க உரிய சட்டப்பிரிவுகளை மத்திய அரசு கொண்டு வரலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது