தமிழக செய்திகள்

செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை மாடசாமி சர்வேயர் ராமர் செல்வத்திடம் கொடுத்தார்.

செங்கோட்டை,

செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது 52). இவர் தனது மனைவி ஆறுமுகத்தம்மாள் பெயரில் 2.28 சென்ட் நிலம் மற்றும் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த சொத்து கூட்டு பட்டாவில் இருந்ததால், அதை தனிப்பட்டாவாக மாற்றி தருமாறு செங்கோட்டை சர்வேயர் ராமர்செல்வத்தை (37) அணுகியுள்ளார்.

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்

நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க சர்வேயர் ராமர்செல்வம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாடசாமி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் நோட்டுகளை மாடசாமி சர்வேயர் ராமர்செல்வத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தனிப்பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.