கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

என் அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க... நண்பருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

நண்பருக்கு செல்போனில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி,

என்ஜினீயரிங் மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளம் வடக்குத் தெருவை சேர்ந்த பிச்சை மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் (21 வயது). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி விடுமுறையில் வீட்டிலிருந்த அவர், மாலை சுமார் 6.10 மணியளவில் அதே ஊரிலுள்ள நண்பரான காளிராஜ் என்பவரின் செல்போனுக்கு திடீரென மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், "என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க... சந்தோசமா இருங்க... எல்லாரும் ஹாப்பியா இருங்க..." என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

மெசேஜை அனுப்பிவிட்டு, வீட்டிலுள்ள மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டுள்ளார். அவரது மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததுடன், சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டிற்குள் அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு நண்பரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை தூக்கில் இருந்து இறக்கியபோது, ஏற்கனவே இறந்திருந்ததை அறிந்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.