சென்னை,
சென்னை மாநகரில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்ததாக நேற்று தகவல் வெளியானது. அதனை துரைமுருகன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும், வேலூர் மாவட்டத்துக்கு என்று காவிரி தண்ணீரை ஒரு கூட்டுக் குடிநீர் திட்டமாக அறிவித்தார்கள். திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரையில் இருக்கின்ற பல நகரங்களுக்கும், பல கிராமங்களுக்கும் காவிரி நீர் கிடைத்து கொண்டிருக்கிறது.
வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைத்துக் கொண்டிருந்த, அத்தண்ணீரும் தற்போது வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்தநிலையில், அந்த காவிரி தண்ணீரை மறித்து, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டு போவதாக இங்கே பேசிய பலர் தெரிவித்தனர்.
அப்படி கொண்டு போவது நியாயமும் அல்ல, விவேகமும் அல்ல. ஜோலார்பேட்டையைத் தவிர, வேறு எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனை சென்னைக்கு கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதைவிடுத்து, வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகிற, பற்றாக்குறையுடன் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவிரி நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால் எங்கள் வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார் கள் என்று தான் நான், வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.
இந்த பேச்சினை திரித்து ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போவதற்கு துரைமுருகன் எதிர்ப்பு என்று மக்களிடத்தில் தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
சென்னையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறவன் நான், சென்னையில் என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும். எனவே, ஒரு தவறான பிரசாரத்தை தொடங்கி, அதன் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.