தமிழக செய்திகள்

தமிழக சட்டசபை ஜூன் 18-ல் கூடுகிறது: கவர்னர் அர்லேகர் உரை!

த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூன் 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று வெளியிட்டார்.

கவர்னர் உரை

அன்றைய கூட்டத்தில், தமிழக கவர்னர் அர்லேகர் உரையாற்ற இருக்கிறார். ஆங்கிலத்தில் இடம்பெறும் அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது. தொடர்ந்து, கவர்னரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார்.

அடுத்த 2 நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள்.

பட்ஜெட் தாக்கல்

தொடர்ந்து, 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில், த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு

தமிழக சட்டசபை நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.