சென்னை,
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப்பதக்கத்தையும், செல்வபிரபு திருமாறன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் தமிழக வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 'Commonwealth Games 2026' போட்டிகளில் Triple jump விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் செல்வ பிரபு ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டை சேர்ந்த இவ்விரு வீரர்களும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் என்பது தனிச்சிறப்பாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலக அளவிலான போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் படைக்க இந்த வெற்றி ஊக்கமாக அமைந்துள்ளது. நம் தமிழ்நாட்டு வீரர்களின் திறமை மேலும் பல உலகப் போட்டிகளில் மிளிர தமிழ்நாடு அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.