சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது - திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு.2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.
முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறைச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்
இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்கும் போது, எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்த்தனர்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கோரினார். சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சோதனை ஆகியவை குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பினர்.
முதல்- அமைச்சராக இருந்த உங்களுக்கு, இன்று நிதிநிலை அறிக்கை மட்டும் படிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியும்; தெரிந்தே பேச வேண்டும் என கூச்சல் போடுகிறீர்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பதில் அளித்தார்.
அதிமுகவினர் மீதான கைது, ரெய்டு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.ஜனநாயகப் படுகொலையில் தி.மு.க. அரசு ஈடுபடுவதாக குற்றம சாட்டினர்.
பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.