தமிழக செய்திகள்

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் - அமைச்சர் மரிய வில்சன் தகவல்

மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கொடுக்க அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் திமுகவுக்கும் தெரியவில்லை என மரிய வில்சன் கூறியுள்ளார்.

சென்னை,

6 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்ற அனிதா ராதாகிருஷ்ணன் கருத்துக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்துள்ளார்.

தூத்துக்குடியில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் 7 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு 100 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்றார்.

மேலும் ஆறு மாதங்களில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு, அமைச்சர் மரிய வில்சன் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,

அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருவதாகவும், அவருக்கு இன்னும் கள யதார்த்தம் (ரியாலிட்டி) புரியவில்லை என்றும் அவர் சாடினார். மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு மரியாதை கொடுக்க அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் திமுகவிற்கும் தெரியவில்லை என்று அவர் விமர்சித்தார்.