சென்னை,
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதிவரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் சவாலாகவே உள்ளது. தற்போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதை பின்பற்றும்பட்சத்தில் மக்களின் நடமாட்டம் அதிகமாகி, தொற்று எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது.
இந்த நிலையில், இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை மறுநாளுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்வார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டங்களில் நடத்தப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் முக்கிய முடிவுகளை அரசு எடுக்கும் என்று தெரிகிறது.